வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - திருவள்ளுவர் கூறுவது என்ன
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 50: இல்வாழ்க்கை.
நீதிநூல்கள் காட்டும் வழியில் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் அதில் வழிகாட்டி பூமியில் நெறியோடு வாழ்பவன் - அவனோடு வாழும் மக்களால் வானுலகில் வாழும் தேவர்களுக்கு சமமாக போற்றப்படுவான்.
"வைக்கப்படும்" என்ற இதே வழியில் மேலும் மூன்று குறட்பாக்கள் உள்ளது
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் - குறள் 214: ஒப்புரவறிதல்.
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் - குறள் 388: இறைமாட்சி.
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் அரசனை மக்களைக் காக்கும் தெய்வம் என அவர் குடிமக்கள் போற்றுவர்
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் - குறள் 850: புல்லறிவாண்மை.
இருக்கிறது என்று நீதி நூல் வழி வாழும் உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், உடன் இருப்பவர்களால் இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.
Comments
Post a Comment